×

ராஜீவ் காந்தி 77ம் பிறந்தநாள்: ராகுல், தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கொண்டாடினர். காங்கிரஸ் மூத்த தலைவர்களும், கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜீவின் மகனுமான ராகுல் காந்தி, டெல்லியில் வீர் பூமியில் உள்ள நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு எனது புகழாரம். ராகுல் காந்தி: மதச்சார்பற்ற இந்தியா மட்டுமே நிலைத்திருக்க கூடிய இந்தியா. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். பிரியங்கா காந்தி (காங். பொதுச் செயலாளர்): அநீதிக்கு முன் தைரியமானவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். நல்லவைக்காக, உரிமைக்காக பேசுவார்கள். இருட்டை கண்டு அஞ்சமாட்டார்கள், தைரியமாக எதிர்கொள்வார்கள். அவர்கள் வஞ்கசத்தால் கறுப்பான வானம் முழுவதும் உண்மையின் ஒளியை வீச செய்வார்கள். தைரியமானவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை. (இத்துடன் தந்தையுடன் இருக்கும் தனது சிறிய வயது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்)

Tags : Rajiv Gandhi ,Rahul , Rajiv Gandhi, Birthday, Rahul, Tribute
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...