×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு.: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 2018 ஜூன் 4 அன்று விசாரணையைத் தொடங்கியது. ஆணையத்தின் இறுதி அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போது விசாரணைக்கான அவகாசம் முடிய உள்ள நிலையில், அதனை ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வரை ஆறுமாதம் காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Commission for Inquiry ,Gunfire Incident ,Tamil Nadu , Tuticorin shooting commission gets 6 more months extension: Tamil Nadu government order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...