கென்யா தலைநகர் நைரோபியில் உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் நேற்று முன்தினம் நடந்த 4X400 கலப்பு தொடர் ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்தியர்கள் அப்துல் ரசாக், கபில், பிரியா மோகன், சம்மி ஆகியோர் பந்தய தொலைவை 3நிமிடம் 23.36 விநாடிகளில் கடந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் அப்துல் ரசாக்கிற்கு பதிலாக தமிழக வீரர் பரத் ஸ்ரீதரன் களிமிறக்கப்பட்டார். இறுதியில் இந்தியக்குழு 3நிமிடம் 20.60விநாடிகளில் பந்தய தொலைவை கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை வென்றது. தங்கள் சுற்றை முடிக்க தகுதிச்சுற்றில் அப்துல் ரசாக் 48.18விநாடிகளும், இறுதிச் சுற்றில் பரத் 47.55விநாடிகளும் எடுத்துக் கொண்டனர்.
உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வெல்லும் 5வந்து பதக்கம். நடப்பு போட்டியில் முதல் பதக்கம். இது குறித்து உலக தடகள சம்மேளனத்தின் தலைவர் செபாஸ்டின் கோ, ‘அருமையான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பாராட்டுகள். உங்கள் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். உங்கள் நாடு தடகளத்தில் முன்னேறி வருவதை இது காட்டுகிறது’ என்று பாராட்டி உள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த செபாஸ்டின் ஒலிம்பிக் போட்டிகளில் 1500மீ ஓட்டத்தில் 2 தங்கம், 800மீ ஓட்டத்தில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றவர்.