அம்பை: கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி முருகதாசையும், அவரது பரிபாலனத்திற்குட்பட்ட நெல்லை மாவட்டத்தின் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்தையனார் கோயிலையும் இழிவுபடுத்தி காட்சிகள் இடம் பெற்றதாக டைரக்டர் பாலா மீதும் நடிகர் ஆர்யா மீதும் சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கராத்மஜன் அம்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்ததற்காக நடிகர் ஆர்யா வருத்தம் தெரிவித்ததையடுத்து சில மாதங்களுக்கு முன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார், இதை தொடர்ந்து டைரக்டர் பாலா, இறுதிக்கட்ட விசாரணைக்காக அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். இதில் தீர்ப்பு வழங்கிய அம்பை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் டைரக்டர் பாலா குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.