சென்னை: கமிஷனரின் ஒப்புதல் இல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்க அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிகாரிகளின் கீழ் மேலாளர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட நிலையிலான அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர்.
இந்த நிலையில் எழுத்தர், கண்காணிப்பாளர் , மேலாளர், அர்ச்சகர் நிலையிலான ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடங்களில் தகுதிக்கேற்பவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஓய்வு பெற்ற பிறகும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து மீண்டும் பணியமர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்று பெரும்பாலான கோயில்களில் தொடர்ந்து அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அறநிலைத் துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வு பெற்றால் உடனடியாக அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் பணியாற்றி வரும் பட்சத்தில் இது தொடர்பாக ஆணையர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும் அவ்வாறு இல்லாமல் யாராவது தொடர்ந்து பணியாற்றி வந்தால் கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.