சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதிஜ்ஜா(56), இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், 109 நாட்கள் தொடர்ந்து எக்மோ மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை அளித்து, அவரது உயிரை காப்பாற்றி, குரோம்பேட்டை ரேலா இம்மருத்துவமனை அரிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், ரேலா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான பேராசிரியர் முகமது ரேலா, அந்த முதியவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ‘‘ எக்மோ சிகிச்சையானது, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை இடைக்கால ஏற்பாடாக மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சையாகும். ஆனால் இப்போது எங்களின் மருத்துவ குழு உண்மையிலேயே அதை ஒரு உயிர் காக்கும் சிகிச்சை முறையாக மாற்றியுள்ளது. இந்த சிகிச்சையை நமது சமூகத்திற்கு எங்களால் வழங்க முடியுமானால், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிர்வாழ சிறந்த வாய்ப்பை வழங்குவதோடு, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். 60 நாட்களுக்கு மேலாக செயற்கை நுரையீரல் மூலம் சுவாசித்து, நுரையீரல் மாற்று சிகிச்சை இல்லாமல் குணமடைந்த ஒரே நோயாளி முதிஜ்ஜாதான்.