×

கிருஷ்ணகிரி-திண்டிவனம் என்.ஹெச் பெரியபனகமுட்லுவில் டோல்கேட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: 10 கி.மீ இடைவெளியில் அமைப்பதால் போராட்ட எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 10 வருட போராட்டத்திற்கு பின்பு முடிவடையும் நிலையில், 10 கிமீ இடைவெளியில் டோல்கேட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, அதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, சாலையோரங்களில் இருந்த நிலங்களை கையகப்படுத்தி, சாலையோரங்களில் இருந்த மரங்களும் அகற்றப்பட்டன. இந்த சாலையை அமைக்க டெண்டர் எடுத்தவர்கள், கடந்த அதிமுக ஆட்சியில், சாலையை அமைக்கவில்லை. அப்போதைய அரசு ஒத்துழைப்பு வழங்காததால் தான், சாலை அமைக்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தமிழக அரசின் ஒத்துழைப்போடு ஒப்பந்ததாரர்கள் சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, இந்த சாலையில் உள்ள 2 பெரிய பாலங்கள், 16 சிறிய பாலங்கள், 366 குறும் பாலங்கள் மற்றும் இரண்டு ரயில்வே மேல்பாலங்கள், முடியும் நிலையில் உள்ளது. சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. சாலை பணிகள் நிறைவடையாததால், கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை செல்லும் பொதுமக்கள், மாற்று பாதையில் சென்று வந்தனர். இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளானதோடு, இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வந்தது. தற்போது சாலை பணிகள் நிறைவு பெறும் நேரத்தில், டோல்கேட் அமைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து 4.3 கி.மீ தொலைவில் உள்ள பெரியபனகமுட்லு என்ற இடத்தில், டோல்கேட் அமைக்க நிலங்களை தேர்வு செய்து, நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அஞ்சூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியபனமுட்லு பகுதி, கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் இருந்து 4.3 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து 10 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. பெரியபனகமுட்லு கிராமம் அருகே டோல்கேட் அமைத்தால் ஜெகதேவி, தொகரப்பள்ளி, ஐகுந்தம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, கல்லாவி போன்ற பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தினமும் வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஒரு டோல்கேட்டிற்கும் மற்றொரு டோல்கேட்டிற்கும் 60 கி.மீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும், நகராட்சியில் இருந்து 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் மட்டுமே டோல்கேட் அமைக்க வேண்டும் என்றும் விதிமுறை இருக்கும் நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து 10 கி.மீ தூரத்தில் மற்றொரு டோல்கேட் அமைப்பதால் பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து வருபவர்கள் 10 கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு டோல்கேட்டிலும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, பெரியபனகமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கைவிட வேண்டும். அவ்வாறு டோல்கேட் அமைத்தால், போராட்டங்கள் நடத்த தயங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags : Krishnagiri-Tindivanam ,Periyapanakamutlu , Public protest against tollgate at Krishnagiri-Tindivanam NH Periyapanakamudlu: Strike warning due to 10 km gap
× RELATED கிருஷ்ணகிரி-திண்டிவனம் என்.ஹெச்...