×

ஏரல் அருகே பயங்கரம் பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல்

ஏரல்: ஏரல்  அருகே அகரம் பஞ்சாயத்து தலைவர் சரமாரி  வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  தூத்துக்குடி  மாவட்டம், ஏரலை அடுத்த அகரம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் பொன்சீலன்  (45). அதிமுக பிரமுகரான இவர், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துக்களின்  கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி எஸ்தர் மெர்லின். 3  மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் முத்தையாபுரம்  வீரபாண்டிய நகரில் வசித்துள்ளார். அகரத்தில் நேற்று 2வது நாளாக நடந்த கொடை விழாவில் கலந்து கொண்டதோடு, பஞ்சாயத்து  துணைத் தலைவர் தவசிக்கனி என்பவரது வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு காரில் 7 பேர் கும்பல் வந்தது. அவர்கள் வீட்டின் மேல் ஏறி ஓடுகளை உடைத்து கம்பு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட  பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே குதித்தனர். பின்னர் அந்த கும்பல் பொன்சீலனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பொன்சீலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் 7 பேரும் கதவை  உடைத்து தயாராக நின்ற காரில் ஏறி தப்பி விட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;  கடந்த 10 வருடங்களுக்கு முன்பு   அகரத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பொன்சீலனும், அவரது நண்பர் லெனினும்   வேலை பார்த்தனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கழிவு   எண்ணெய், உரம் உள்ளிட்ட வேஸ்டேஜ்களை குறைந்த விலைக்கு எடுத்து கூடுதல்   விலைக்கு விற்றனர். இதில் மோகனுக்கும், பொன்சீலனுக்கும் பணம் தொடர்பாக   தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து 2008ல் பொன்சீலனும், ெலனினும் சேர்ந்து  மோகனை  அகரம் பாலம் அருகே வெட்டிக் கொன்றனர். அதன்பின்னர் பொன்சீலனும்,  லெனினும்  சேர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டனர். இதற்கிடையே மோகனை கொன்ற  வழக்கில்  சாட்சிகள் இல்லாததால் பொன்சீலனும், லெனினும்   விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் துறைமுகத்தில் வேஸ்டேஜ்களை எடுத்து   விற்பனை செய்வது தொடர்பாக பொன்சீலனுக்கும், லெனினுக்கும் தகராறு  ஏற்பட்டது.  

இதைத்தொடர்ந்து பொன்சீலன் தலைமையில் 14 பேர் கொண்ட  கூலிப்படையினர் 2017ல் அகரம் அருகே வாழைத்தோட்டத்தில் லெனினை  வெட்டிக் கொன்றனர்.  இந்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்  கோர்ட்டில் நடந்து வருகிறது. லெனின் கொலைக்கு  பழிக்குப்பழியாக அவரது தம்பிகள் ஜெகன், ரூபன் தூண்டுதலின் பேரில் பொன்சீலன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Tags : Eral , Earl, panchayat leader, assassination, manslaughter
× RELATED ஏரல் பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்