புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி துணை நிலை கவர்னரும் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (76) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகுமாரியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உற்ற துணையை இழந்து வாடும் குமரி அனந்தன் அவர்களுக்கும் - தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித், அமைச்சர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.