சென்னை: சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள என் தாயாரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் கிருஷ்ணகுமாரி (78) இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார். என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.