×

கோவை மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்ற முடியுமோ, அங்கெல்லாம் நிறைவேற்ற நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துமாறும் பேரவையில் உறுப்பினர் ஒருவர் முதல்முறையில் பேசும் போது, அதை கன்னிப்பேச்சு என்று கூற வேண்டாம் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்களது கோரிக்கைக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்

+மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த மாண்புமிகு உறுப்பினர் இங்கே பேசுகிறபோது, மெட்ரோ இரயில் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் காட்டி, ‘கோவைக்கு மத்திய அரசோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறீர்களே, அது வேதனை அளிக்கிறது என்ற பொருள்பட இங்கே ஒரு கருத்தைச் சொன்னார்கள்.  நம்முடைய மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களும் அதற்கு விளக்கம் தந்திருக்கிறார்கள்.  
மெட்ரோ இரயில் திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசினுடைய உதவியோடு, ஒன்றிய அரசின் நிதியுதவியைப் பெற்றுத்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றிட முடியும்.

அப்படித்தான் இதுவரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நேற்றைக்குக்கூட ஒன்றிய அரசிடமிருந்து எங்களுக்கு வந்திருக்கிற செய்தி; இன்றைக்கு இரண்டாம் கட்டத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது என்ற செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது.  மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்பதுபோல், நான் ஏற்கெனவே டெல்லிக்குச் சென்று பாரதப் பிரதமரைச் சந்தித்தபோது, இதுகுறித்து நான் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்; அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறேன்.  அந்த அழுத்தத்தின் அடிப்படையில்தான், நேற்றைக்கு அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது.  இங்கே மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதுபோல, கோவைக்கும் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம்.  கவலைப்பட வேண்டாம்.  கோவைக்கு மட்டுமல்ல; மதுரைக்கும் அறிவித்திருக்கிறோம்.  ஆகையால், எங்கெங்கு அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டுமோ, அந்தந்த முறையிலே நிச்சயமாக நிறைவேற்றப்படும்.  

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் பேசுகிறபோது, கோவையில் இருக்கக்கூடிய மத்திய சிறையை மாற்றி, அங்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.  செம்மொழி மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்தியபோதே, ஏற்கெனவே கலைஞர் அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குப்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, 10 ஆண்டு காலம் அவர்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை;  சிந்திக்கவில்லை.  எனவே, உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் இந்த ஆட்சியில் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,என்றார்.


Tags : Goa ,Tamil Nadu ,Stalin , திமுக அரசு
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...