சென்னை : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என் பெயரையும் முன்னாள் அமைச்சர்கள் பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது கோடநாடு கொலை வழக்கில் விசாரணை நடைபெறுவதை கண்டித்து அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியபடி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அதிமுகவினர் வெளியேறிய நிலையில் பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அரசின் செயலை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். எதிர்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. இதை கண்டித்து இன்றும் நாளையும் சட்டப்பேரவையை புறக்கணிக்கிறோம் என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றது. கொள்ளை முயற்சியின் போது, காவலாளி கொலை செய்யப்பட்டார்.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது.கொடநாடு வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.கொடநாடு வழக்கில் எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடைபெற்று வருகிறது.கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன் அளித்த வாக்குமூலம அடிப்படையில் என் பெயரை சேர்க்க முயற்சி நடைபெறுகிறது.கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை,என்றார்.