சென்னை: செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று ஆய்வு செய்யும்படி தமிழக மருத்துவத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய் அளவிற்கு ஆர்.டி.பிசி.ஆர் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு 1500 முதல் 2000 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மூன்றரை லட்சம் மதிப்புள்ள ஒரு கருவியில் 4 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரு கருவி மூலம் ஒரு மாதிரி எடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 கோடி ரூபாய் அளவிற்கான கருவிகள் காலாவதியாகிவிட்டன. எனவே, அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பரிசோதனை கருவிகள் கையாண்டதில் முறைகேடுகள் இருப்பது பேராபத்து என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவத் துறை செயலாளர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வில், முறைகேடுகளோ, குறைபாடுகளோ கண்டறியப்பட்டால், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.