வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி சரபோஜி ராஜபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் 100 நாள் திட்ட பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் வேதாரண்யம் தாலுக்கா வண்டுவஞ்செரி கிராமம் பெரிய திடல் பகுதியை சேர்ந்த நாகப்பன் மனைவி அலமேலு(70) என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டார். இதையடுத்து முகாம் நடந்த இடம் அருகே உள்ள மரத்தடியில் அலமேலு அமர்ந்திருந்தார்.
அப்போது ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று அங்கு நின்ற ஒரு சிலர் கூறினர். ஏற்கனவே ஊசி போட்டது தெரியாமல் மரத்தடியில் அமர்ந்திருந்த அலமேலுவையும் அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். 2 தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்து அலமேலுவும் வரிசையில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற அலமேலு, தனக்கு 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது என்று மகளிடம் கூறினார்.
இந்த விஷயம் வௌியில் பரவ ஆரம்பித்தது. தகவல் அறிந்த சுகாதார துறையினர் அலமேலு வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்ததில், அலமேலுவுக்கு ஒரே நாளில் 2 கொரோனா தடுப்பூசி போடப்பட்டது தெரியவந்தது. பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அலமேலுவை அழைத்து சென்று தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். ஒரு முறை ஊசி போட்டாலே ஜுரம், தலைவலி வரும் நேரத்தில் ஒரே நாளில் 2 முறை தடுப்பூசி போட்டும் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் அலமேலு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.