சாத்தூர்: சாத்தூர் அருகிலுள்ள படந்தால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான சிலம்பம், கராத்தே போட்டியில் 6 தங்கம் 6 வெள்ளி உள்ளிட்ட 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் சக்கர வியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் விளையாட்டு கலைக்கூடம் சார்பில், பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த 14 பேர் கொண்ட குழு தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 11, 12, 13 ஆகிய தேதிகளில் இமாச்சல் பிரதேசத்தில் மணாலி பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 21 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகம் சார்பில் சாத்தூரில் உள்ள சக்கரவியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் குழுவினர் பங்கேற்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களை பெற்றனர். 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை சாத்தூரை சேர்ந்த சக்கர வியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் குழுவினர் வென்று சாதனை படைத்தனர். சாத்தூர் ரயில் நிலையம் வந்து இறங்கிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.