×

மூன்றே ஆண்டுகள் தான்… அதற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிமுடித்தாக வேண்டும் : மத்திய அரசுக்கு நீதிமன்றம் கெடு!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணியை 36 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பலஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன் பெற்றிருப்பார்கள். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.  

இந்த மனு மீது நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு இன்று அளித்த தீர்ப்பு:தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டபோது, பிற மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.இந்த உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து 3 ஆண்டுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட வேண்டும். கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டுமான பணிகள் ஒவ்வொன்றுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags : Madurai ,Federal Government , நீதிபதிகள்
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...