×

செப். 21 வரை நடைபெற இருந்த தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 13ல் நிறைவு!: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

சென்னை: செப்டம்பர் 21 வரை நடைபெற இருந்த தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-22ம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 14ம் தேதி வேளாண் நிதிநிலைஅறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 2021- 22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வரக்கூடிய வியாழக்கிழமை முடிவடையக்கூடிய நிலையில் திடீரென அலுவல் ஆய்வு கூட்டமானது சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, துரைமுருகன் உள்ளிட்டோரும் எதிர்க்கட்சியின் சார்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் மானிய கோரிக்கை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை 23 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு 13ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ஒருசில துறைகள் மாற்றம் செய்யப்பட்டு 9 நாட்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.

Tags : Tamil Nadu ,Speaker ,Appavu , Tamil Nadu Budget Session, Speaker Appavu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...