காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி படப்பை குணாவை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . அவரது பெற்றோருக்கு சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு விவரத்தை பார்ப்பதற்காக பட்டாவை பெற்றுள்ளார். இதற்கிடையில், மதுரமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடி குணா ( எ ) படப்பை குணா என்பவரிடம், பிரபாவதியின் தந்தை கமார் ஒன்றரை ஆண்டுக்கு முன் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்துக்கு பதிலாக, மேற்கண்ட நிலத்தின் பத்திரத்தை கேட்டு ரவுடி குணா மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்தவேளையில், நிலத்தின் பட்டாவை பிரபாவதி பெற்று சென்றதால், ஆத்திரமடைந்த குணா, தனது அடியாட்கள் மூலம் பிரபாவதியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து பிரபாவதி, சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி குணாவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குணா (எ) படப்பை குணா காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட 24 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.