×

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை சட்டப்பேரவையில் பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : விவசாய கடன் மற்றும் நகை கடன் குறித்த விவாதத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்த விவாதத்தின்போது, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயகுமார் அவர்கள், இங்கே பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  அவற்றிற்குரிய விளக்கங்களை நம்முடைய அமைச்சர் பெருமக்கள் இங்கே தந்திருக்கிறார்கள்.  எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை.  

ஒரே வரியிலே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில், தி.மு.க. வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலே, பின்வாங்குவதற்கான முயற்சி என்ற பொருள்பட அவர் ஒரு கருத்தை எடுத்துப் பேசினார்.  நேற்றைக்கு முன்தினம் 100-வது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்குப் பாராட்டுத் தெரிவித்து பலர் இந்த அவையிலே பேசியபோது, நான் ஏற்புரை ஆற்றிப் பேசுகிறபோதுகூட சொன்னேன்.  எந்தக் காரணத்தைக் கொண்டும், நாங்கள் அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம்.  (மேசையைத் தட்டும் ஒலி)  

நீங்கள் கேட்கலாம் - விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்வோம்; நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே! அதற்கெல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே! என்ற அந்த அடிப்படையிலே உறுப்பினர் திரு. உதயகுமார் அவர்கள் இங்கே பேசியிருக்கலாம்.  
உறுதியாகச் சொல்கிறேன்.  வெள்ளை அறிக்கையிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  நிதிநிலை அறிக்கையிலேகூட, மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.  

அந்த நகைக்கடன் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருதினாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன.  (மேசையைத் தட்டும் ஒலி)  விவசாயிகளுடைய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன.  அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாக அது வழங்கப்படும் என்ற உறுதிமொழியைச் சொல்லியிருக்கிறோம்.  (மேசையைத் தட்டும் ஒலி)
உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை - நாட்டு மக்களும் மறக்கவில்லை.  அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள் - பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை.  அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள்; தந்தீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி)  ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீர்கள்; கொடுத்தீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி) ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீர்களே? யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி)  குறைந்த விலையிலே, அவசியமான மளிகைப் பொருட்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்.  அது கொடுக்கப்பட்டதா?  (மேசையைத் தட்டும் ஒலி)    அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்று உறுதி கொடுத்தீர்கள்.  அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று?  (மேசையைத் தட்டும் ஒலி)  கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அதைக் கொடுத்தீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி) பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என்றீர்கள், அதை அமைத்திருக்கிறீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி) அனைத்துப் பழங்களுக்குமான சிறப்பு அங்காடிகளை உருவாக்குவோம் - கட்டித் தருவோம் என்று சொன்னீர்கள்.  எங்கேயாவது கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி)  
அனைத்துப் பொது இடங்களிலும் வைபை வசதி ஏற்படுத்தித் தருவோம்  என்று சொன்னீர்கள், அப்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிற இடத்தை எங்கேயாவது காட்டுங்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி)  டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னீர்கள்.  அதை அமைத்தீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி) பட்டு-ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அதை எங்கேயாவது உருவாக்கியிருக்கிறீர்களா?  (மேசையைத் தட்டும் ஒலி) சென்னையிலே மோனோ-இரயில் விடப்படும் என்று சொன்னீர்கள்.  அதற்குப்பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த மெட்ரோ இரயில் திட்டத்தைத்தான் நிறைவேற்றினீர்கள். (மேசையைத் தட்டும் ஒலி)  இப்படி பெரிய பட்டியலே இருக்கின்றது.  

விவசாயிகளுடைய பயிர்க் கடனைப் பொறுத்தவரையில், அதேபோன்று நகைக்கடனைப் பொறுத்தவரையில், எங்கெங்கு முறைகேடு நடந்திருக்கிறது, எங்கெங்கு தவறுகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், தன்னுடைய துறை மானியக் கோரிக்கை விவாத்திற்கு பதிலளித்துப் பேசுகிறபோது, நிச்சயமாக அவை குறித்து ஆதாரப்பூர்வமாக உங்களிடத்திலே எடுத்துச் சொல்வார் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உங்கள் ஆட்சியில் இதைச் செய்யவில்லையே, செய்யவில்லையே என்று நான் கேட்டதற்கு - அதேபோன்று நாங்களும் செய்யாமல் இருப்பதற்ககாக இதைச்  சொல்கிறோம் என்று யாரும் கருத வேண்டாம்.  (மேசையைத் தட்டும் ஒலி)    நிச்சயமாக, உறுதியாக - அதிலேயிருக்கக்கூடிய முறைகேடுகளை எல்லாம் களைந்து, இருக்கக்கூடிய நிதிப் பற்றாக்குறையையும் சரிசெய்து, உறுதியாக தேர்தல் நேரத்தில் வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய இலட்சியம் - அதுதான் எங்களுடைய பணி.  எனவே, யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். 


Tags : First Minister ,Stalin , மு.க. ஸ்டாலின்
× RELATED இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த 10...