×

ஹைதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சீட்டுகளை போல் சரிந்த கட்டிடங்கள்; பலி எண்ணிக்கை 1,297 ஆக அதிகரிப்பு

போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்ந்துள்ளது. கரீபியன் நாடான ஹைதியில் நிலையற்ற அரசியல் தன்மை, அதிபர் கொலை செய்யப்பட்டது, வறுமை மற்றும் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் மிக சிரமமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாக பதிவானது. தலைநகர் போர்ட் ஆப் பிரின்சில் இருந்து 125 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள், கட்டிடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் சீட்டு கட்டுகளை போல் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.7.2 அளவிலான பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினார்கள். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 1,297 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரம் பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதோடு, சாலைகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்புக் குழுவினர் ஹைதி விரைந்துள்ளனர்.   இது தொடர்பாக பொறுப்பு பிரதமர் ஏரியல் ஹென்றி, நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். மேலும், சேத விவரம் குறித்து முழுமையாக தெரியாத நிலையில் சர்வதேச உதவியை கேட்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். இந்நாட்டில் கடந்த 2010ல் ஏற்பட்ட பூகம்பத்தில் 3 லட்சம் பேர் பலியாகினர்.

Tags : Haiti , ஹைதி
× RELATED ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால்...