×

ஆவணி, ஓண பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு: தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாதம் மற்றும் ஓண பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை(15ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை(16ம் தேதி) முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 19ம் தேதி முதல் ஓணம் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் 23ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.

இதனால் சபரிமலையில் இந்தமுறை 8 நாட்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இந்த முறையும் ஏற்கனவே உள்ள ஆன் லைன் முன்பதிவு மற்றும் 2 டோஸ் தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிங் சான்றிதழ் விதிமுறைபடியே தரிசனம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை நிறைபுத்தரிசி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்ேதாறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது உண்டு. நாட்டில் விவசாயம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை 16ம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அப்போது புதிய நெற்கதிர்கள் பூஜை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Avani ,Ona Pujas ,Sabarimala , Avani, Ona Puja, Sabarimala, Walking, Opening
× RELATED சிம்ம ராசி குழந்தையும் தெய்வமும்