கோவை: கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த வாரம் நில அளவை தொடர்பாக பேச வந்தவர் கோபால்சாமி. விவசாயி. இவரது காலில் கிராம உதவியாளர் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து கலெக்டர் சமீரன் உத்தரவுப்படி மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் நேரடியாக சென்று விஏஓ கலைசெல்வி, முத்துசாமி, கோபால்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முத்துசாமியை கோபால்சாமி காலில் விழ நிர்பந்தித்தது உண்மை என்றுதெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோபால்சாமி தரப்பில் முத்துசாமி, கோபால்சாமியின் கன்னத்தில் அறைந்ததற்கான வீடியோ ஆதாரத்தை கொடுத்தனர். அதில், கோபால்சாமியின் கன்னத்தில் அறைந்து தாக்கும் முத்துசாமி அதை ஒருவர் வீடியோ எடுப்பது தெரிந்ததும், காலில் விழுந்து நாடகமாடிய காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர் முத்துசாமி, உண்மையை மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். குற்றநடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.