×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சியில் இளம்பெண்களை கடத்தி பண்ணை வீட்டில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ பதிவு செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சி.பி.ஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் நேற்று பொள்ளாச்சி கிட்ட சூரம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (29) என்பவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே கைதாகியுள்ள திருநாவுக்கரசு மற்றும் சதீஷின் நண்பர். சதீஷுக்கு சொந்தமான துணிக்கடையில் இளம்பெண்களை அழைத்து சென்று பேசுவதையும், பின்னர் அவர்களை ஆசை காட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.

அருண்குமார் பொள்ளாச்சி பகுதியில் அதிமுக பிரமுகராக இருப்பதாக தெரிகிறது. தகவல் தொழில் நுட்ப பிரிவில் இவர் பணியாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய நபர்கள், அதிமுக பிரமுகர்கள் குறித்து தெரிவித்திருக்கிறார். பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கு தொடர்பாக 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு வெளியாகியுள்ளது. சிபிஐ போலீசார் பொள்ளாச்சி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விரைவில் தேடப்படும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AIADMK ,Pollachi , AIADMK leader arrested in Pollachi sex case
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...