×

கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி போலீஸ் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், எஸ்எம்.நகர், காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தர்மராஜன் (26). இவர் ஆவடி அருகே வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சந்திரலேகா (24). தம்பதிக்கு மதியழகன் (4) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை 3 மணி அளவில் தர்மராஜன் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு சந்திரலேகா குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது 4 மணி அளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டதால் சந்திரலேகா திறந்துள்ளார். அப்போது வெளியே நின்றிருந்த 2 பேர், ‘’உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்’ என்று கூறிக்கொண்டே வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இதன்பின்னர் அவர்கள் சந்திரலேகாவுக்கு தொற்று பரிசோதனை செய்வதுபோல் நடித்துள்ளார். திடீரென மற்றொரு நபர், சந்திரலேகா முகத்தில் கைக்குட்டையை வைத்து அமுக்கியதில் மயக்கம் அடைந்தார். இதன்பிறகு மர்ம நபர்கள், வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனிடையே மயக்கம் தெளிந்த சந்திரலேகா, நகை, பணம் கொள்ளைப்போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கணவன் உடனடியாக வீட்டுக்கு வந்தார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அருணாச்சலராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.  இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளைதான் நடந்ததா அல்லது நாடகமாக என்ற கோணங்களிலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி போலீஸ் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Dharmarajan ,Tirumullaivayal ,SM Nagar ,Veerapuram ,Aavadi ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...