ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள சாம்ராஜ் பகுதியில் தனியார் எஸ்டேட் தொழிற்சாலையில் சேகரிக்கப்படும் தேயிலை கழிவுகள் நீரோடை மற்றும் வனப்பகுதிகளில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகே சாம்ராஜ் பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தேயிலை தூள் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தேயிலை தொழிற்சாலை சாம்ராஜ் வனப்பகுதியை ஒட்டியே உள்ளது. இதனால், இந்த தேயிலை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வனப்பகுதிக்குள் செல்கிறது. இதனால், நீரோடைகள் மாசடைந்து வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க இந்த தேயிலை தொழிற்சாலையில் சேகரிக்கப்படும் ேதயிலை கழிவுகள் தற்போது வனப்பகுதியிலும், நீரோடைகளிலும் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், நீரோடை மற்றும் வனப்பகுதிகள் மாசடைந்துள்ளன. மேலும், இந்த வனத்தில் ஏராளமான காட்டுமாடுகள், புலி, சிறுத்தை மற்றும் காட்டுமாடுகள் உள்ளன. இவைகள் இந்த கழிவுகளை உட்க்கொள்வதன் மூலம் வன விலங்குகளுக்கு நோய் தாக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தேயிலை கழிவுகளை கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.