ஆனைமலை : டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில் சிறப்பு வழிபாடு நடத்தி நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.வனத்தைப் பாதுகாக்கும், யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில், பராமரிக்கப்பட்டு வரும் 28 வளர்ப்பு யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கோழிகமுத்தி பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அப்போது, யானைகள் துதிக்கையை தூக்கி தரிசனம் செய்த காட்சி அங்கிருந்த மலைவாழ் மக்கள் மற்றும் யானை பாகனங்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று காரணமாக, உலக யானைகள் தினம் ஆடம்பரம் இல்லாமலும், சுற்றுலாப்பயணிகள் இல்லாமலும் கொண்டாடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.