சென்னை: தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் மதன். இவர் பப்ஜி விளையாட்டின்போது ஆபாசமாக பேசி, அந்த வீடியோவை யூ-டியூபில் பதிவிட்டு அதன்மூலாம் பார்வையாளர்களை பெற்று, வருமானம் ஈட்டி வந்தார். இந்தநிலையில் பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் என்றும், உதவி செய்வதாக பல கோடி கொரோனா நிதி வாங்கி ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்தனர். இதையடுத்து மதன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 294(பி), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, 67ஏ ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு போலீசார் பப்ஜி மதனை கடந்த ஜூன் 18ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர். 1600 பக்கம் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2 ஆயிரத்து 848 பேரிடம் ரூ.2 கோடியே 89 லட்சம் பண மோசடி செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மதனின் மனைவி கிருத்திகாவை 2வது குற்றவாளியாக இந்த வழக்கில் போலீஸார் சேர்த்து. இருவர் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.