பல்லாவரம்: பல்லாவரம் அருகே தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை கோதண்ட நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (56). இவர், பம்மல் நாகல்கேணி சற்குணம் சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கடந்த 9 ஆண்டுகளாக ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இந்த தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. அதனை சுத்தம் செய்ய முத்துலிங்கம் கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது, விஷவாயு தாக்கியதால் முத்துலிங்கம் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட சக ஊழியர்கள், சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துலிங்கம் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், முத்துலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.