மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77). கடந்த 8ம் தேதி இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. மூச்சு விட சிரமப்பட்ட அவர், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென நேற்று முன்தினம் இவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் உள்ள இவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்கள் கூறும்போது, ‘‘மதுரை ஆதீனத்திற்கு நுரையீரல் கடுமையாக பாதித்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகிறோம்’’ என்றனர். மதுரை ஆதீனத்தை, தருமபுர ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்து சென்றனர்.