புதுடெல்லி: கொலை குற்ற தண்டனை பெற்று கடந்த 33 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனை விடுவிப்பது தொடர்பாக நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜன் வழக்கறிஞர் பாரிவேந்தன் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில். நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா அமர்வில் இது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்களின் கருத்தை கேட்டு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது என தமிழக உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துல, தமிழக அரசின் கருத்தை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர். இருப்பினும், மனுதாரர் ராஜனை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்ய, நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.