×

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் தொய்வு.. உதயநிதி ஸ்டாலின் பாணியில் பீகாரில் செங்கல் போராட்டம்!

பாட்னா: சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, கையில் எய்ம்ஸ் செங்கலுடன் திமுக இளைஞரின் செயலாளர் உதயநிதி போட்ட அச்சாரம், பீகாரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பீகார் மாநிலம் தர்மங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதம் ஆவதை கண்டித்து அப்பகுதி மக்கள் செங்கற்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய ஒன்றிய நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லீ பீகாரின் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்த ஒன்றிய அரசு, 2020ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே கட்டப்படும் என்றும் 2024ம் ஆண்டுக்குள் திறக்கப்படும் எனவும் அறிவித்தது.

ஆனால் இதுவரை அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடிக்கல் நாட்டு விழா நடத்த மாணவர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக வீடு வீடாக சென்று செங்கலை சேகரிக்கும் வேளையில் களம் இறங்கியுள்ள மாணவர் சங்கத்தினரும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு லட்சம் செங்கற்களை சேகரித்த உடன் அதனை ஒன்றிய அரசுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கற்கள் வீடு வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 30,000 செங்கற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பீகாரில் நடைபெறும் இந்த எழுச்சி போராட்டத்திற்கு வித்திட்டதற்கு காரணம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தான். சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கையில் எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அந்த செங்கலை முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தார். பீகாரை போன்று தமிழகத்தின் மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இடம் தேர்வு செய்ததுடன் அந்த பணிகள் முடங்கியுள்ளன.மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது என்று ஒன்றிய அரசு பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : AIIMS ,Bihar ,Udayanidhi Stalin , எய்ம்ஸ்
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...