×

எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு முடக்கம்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் வெளியானது !

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து, கடந்த 10ம் தேதி எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கிய நண்பரான சந்திரபிரகாசுக்கு சொந்தமான கே.சி.பி என்ஜினீயர்ஸ் நிறுவனம், மதுக்கரை அடுத்த பாலத்துறையில் உள்ள வி.எஸ்.ஐ.எம்.சான்ட்குவாரியில் நேற்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. அதில், ஒப்பந்த பணிகளுடன் மாநகராட்சி தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் குடியிருப்புகளையும் சீரமைத்து கொடுக்கப்பட்ட ஆவணங்கள் வெளியானது.

இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : SB ,Velumani , AIADMK, Velumani, Corruption Eradication Department
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...