×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் வழங்கிய திருவிளையாடல்

மதுரை : மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் 10 திருவிளையாடல்களின் முக்கியப் பெருமைக்குரிய கருங்குருவிக்கு உபதேசம் நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா ஆக. 4ல் வாஸ்து சாந்தி நடத்தப்பட்டு, ஆக. 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா ஆக. 22ல் நிறைவடைகிறது. ஆக. 11 துவங்கி அடுத்த பத்து நாட்களிலும், பத்து திருவிளையாடல்கள் நடந்தேறி ஆன்மிக அற்புதம் நிறைக்கிறது.

ஆடிப்பூரம் நாளான நேற்று (ஆக. 11), மீனாட்சியம்மனுக்கு ஏற்றி இறக்கும் வைபத்துடன் முதல்நாள் திருவிளையாடல் விழா ஆரம்பித்தது. நேற்று காலை கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் உள் விழாவாகவே இது நடத்தப்பட்டது.

கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் சிறப்பு குறித்து கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘கருங்குருவிக்கு உபதேசம் அற்புத திருவிளையாடலாகும். முற்பிறவியில் செய்த சிறிய பாவத்திற்கென ஒருவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறக்கிறான். இந்த கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தியதால், உயிருக்குப்பயந்து நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அந்த குருவி வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறது. அந்நேரம், மரத்தின் கீழே சிலர், ‘பொற்றாமரைக்குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும்’ என்று உரையாடிக் கொண்டிருக்க, அதைக்கேட்ட கருங்குருவி அங்கிருந்து நேரே மதுரைக்கு வருகிறது.

பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால், குருவியின் பக்திக்கு இரங்கிய இறைவன், ‘மிருத்யுஞ்சய மந்திரத்தை’ உபதேசித்து, கருங்குருவியின் இனத்தையே ‘எளியான்’ என்பதை மாற்றி ‘வலியான்’ என வழங்கச் செய்தாராம்’’ என்றனர்.

இன்று (ஆக. 12) சதுர்த்தி நாளில் 2ம் திருநாள் நடக்கிறது. இதில் நாரைக்கு மோட்சமளித்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து தினமும் ஒரு திருவிளையாடல் என நாளை முதல் மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அருளியது, உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது மற்றும் சுவாமிக்கு பட்டாபிஷேகம், நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்றதென அடுத்தடுத்து நிகழ்த்தப்படும் திருவிளையாடல்கள் அற்புதமானவை. நேற்று ஆடிபூரத்தை ஒட்டி, மீனாட்சியம்மன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

 சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாளை வெள்ளி துவங்கி ஞாயிறு வரை கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை.

Tags : Meenakshi Amman Temple, Madurai , Madurai, Meenakshi Amman Temple, Tiruvilaiyadal, Aadi Function
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை