×

ஸ்டான்லி மருத்துவ மாணவி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவி  தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியளிக்கும் வகையில், அவரது உடல் அருகே ஊசி கிடந்ததால் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சோபியா(27) பயிற்சி டாக்டராக பணியாற்றிக்கொண்டு, மருத்துவ கல்லூரியில் அனஸ்தீஷியா பிரிவில் 3ம் ஆண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சோபியா பணிக்கு வரவில்லை. இதனால் அவரை தேடி சக மாணவிகள், அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றபோது முன்பக்க கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. அவர்கள் பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.  சோபியா இறந்து கிடந்தார். அவரது கையில் ஊசி குத்தப்பட்டதற்கான அடையாளமும் உடல் அருகே சிரிஞ்சும் கிடந்துள்ளது. அவரது மூக்கில் ரத்தம் உறைந்திருந்தது. தகவல் அறிந்ததும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் சென்று சோபியாவின் சடலத்தை கைப்பற்றினர்.  அதன் பிறகு, மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ‘‘சில நாட்களாக சோபியா கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். பெற்றோரிடம் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தனக்குத்தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம்’ என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், மாணவியின் தற்கொலைக்கான முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். வண்ணாரப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Stanley , Why Stanley Medical Student Suicide? Sensational information
× RELATED நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி