×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு!: ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம்..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு கால நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் 2020ல் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் கடுமையாகத் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அந்த வழக்கின் கீழ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.

தனது வீட்டில் இருந்து தந்தை, சகோதரர் புறப்பட்டு செல்லும் போது எத்தகைய உடல்நிலையில் இருந்தனர்? பின்னர் தொடர்பு கொண்டு என்ன விளக்கம் அளித்தனர்? காவல்துறையினருக்கும் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்ததா? என்பது தொடர்பான தகவல்களை சாட்சியமாக நீதிபதி முன்பாக பெர்சி அளித்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயராஜின் மகள் பெர்சி சாட்சியம் அளித்த பின்னர், கைது செய்யப்பட்ட 9 பேரின் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே இந்த வழக்கில் கடந்த 4ம் தேதி ஜெயராஜின் மனைவி செல்வராணி சாட்சியம் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, தனது கணவர், மகன் இறப்பில் நிச்சயம் நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை வழங்கும் என்று எதிர்பார்ப்போடு இருப்பதாக கண்ணீர் மல்க குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.


Tags : Satankulam ,Jayaraj ,Percy , Sathankulam, father, son murdered, Jayaraj daughter Percy, testimony
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது