×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவம் நிறைவு

* சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி
* பக்தர்கள் தரிசிக்க தடையால் வெறிச்சோடியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. மேலும் பக்தர்கள் தரிசிக்க தடைவிதிக்கப்பட்டதால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா மிகவும் பிரசித்திபெற்றது. அதன்படி, ஆடிப்பூரம் பிரமோற்சவம் கடந்த 1ம் தேதி உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக தினமும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தது. மாட வீதியில் வீதியுலா நடத்த தடை நீடிப்பதால், கோயில் 5ம் பிரகாரத்தில் தினமும் அம்மன் பவனி நடந்தது.

இந்நிலையில், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின் நிறைவாக, கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில் காலை 11 மணியளவில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது, பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்றும், இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால், சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்க, எளிய முறையில் தீர்த்தவாரி மற்றும் நிறைவு விழா நடந்தது.

மேலும், அம்மன் சன்னதிகளில் மட்டுமே தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், அம்மனுக்கு இடபாகம் வழங்கிய அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலித்த திருத்தலம் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்வசத்தின் நிறைவாக, அம்மன் சன்னதி எதிரில் தீமிதி விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக, அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதி விழா நடைபெறவில்லை. வழக்கமான வழிபாடுகள், பூஜைகள் மட்டுமே நடந்தது. பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதால் கோயில் வளாகம்  வெறிச்சோடி காணப்பட்டது.



Tags : Adippuram Pramorsavam ,Thiruvannamalai Annamalaiyar Temple , Adippuram Pramorsavam concludes at Thiruvannamalai Annamalaiyar Temple
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...