×

ஆப்கனில் 65% பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள்.. தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலக தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரர் வேண்டுகோள்!!

டெல்லி : தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலக தலைவர்களுக்கு ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வலியுறுத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படையை அமெரிக்கா திரும்ப பெற்றதை தொடர்ந்து, தலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்க தொடங்கி உள்ளது. அரசு படைகள், பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் என தலிபான்கள் கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு மாகாணத்தின் தலைநகரை கைப்பற்றி வரும் அவர்கள், ஒரே வாரத்தில் 7வது தலைநகரையும் கைப்பற்றி உள்ளார்கள்.மேலும்  அங்கு வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனால், அங்கிருக்கும் இந்தியர்களை உடனடியாக நாடு திரும்பும்படி ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டது. இதனிடையே தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலக தலைவர்களுக்கு ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வலியுறுத்தி உள்ளார். அமைதி நிலவ நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தினந்தோறும் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேறிவிட்டனர். வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. ஆப்கன் நாட்டை அழிப்பதை நிறுத்துங்கள்,என்று தெரிவித்துள்ளார்.  நாட்டின் 65% பகுதியை தாலிபான்கள் பிடித்துவிட்ட நிலையில், தங்கள் நாட்டிற்காக ஆப்கன் தலைவர்கள் போராட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Talyphans ,Afkon , ஆப்கான் கிரிக்கெட்
× RELATED ஆப்கனில் திடீர் திருப்பம் : தலைவர்கள்...