கோவை: கோவை பீளமேட்டில் கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது. கோடம்பாக்கத்தில் நேற்று சோதனை நடந்த நிலையில் இன்று கோவை பீளமேட்டில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு நடந்து வருகிறது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடி முறைகேடாக ஒப்பந்தம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களில் சோதனை செய்தனர்.
இந்த ஒப்பந்த முறைகேடு என்பது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது தான் முக்கிய குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டில் கோவையை சேர்ந்த கேசிபி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக இருக்கக்கூடிய சந்திரசேகர், சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் வீடுகளில் நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சந்திரசேகர் வீடு, அவரது பண்ணை வீடு மற்றும் அவர்களது அலுவலகங்களில் நேற்றைய தினம் சோதனை நடைபெற்றது. ஒரே ஐ.பி-யில் உள்ள கணினியில் அதிக அளவு டெண்டர்கள் வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் இங்கு சிக்குமா என்ற கோணத்தில் 2வது நாள் சோதனையானது நடைபெற்று வருகிறது.