சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காகிதக்கூழ் மற்றும் களிமண்ணால் சிலை தயாரிப்பவர்களுக்கு போலீசார் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முருகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காகித கூழ் மற்றும் களிமண் போன்ற பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு முன்னறிவிப்பு இல்லாமலும், சட்டவிதிகளை பின்பற்றாமலும் எங்கள் தொழிலில் காவல் துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இடையூறு செய்வதுடன் சீல் வைத்தும் மூடி வருகிறார்கள். எனவே, சட்டரீதியான நடவடிக்கைகள் பின்பற்றாமல் விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலில் இடையூறு ஏற்படுத்த கூடாது என்று தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜி.கிருஷ்ணராஜா, ஸ்டாலின் அபிமன்யு மனுதாரர் தரப்பில் அஸ்வத்தாமன் ஆஜராகினர்.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.