வால்பாறை : 1982-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 9ம் தேதியை பழங்குடிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று உலக பழங்குடிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வால்பாறை பகுதியில் வனச்சரகர்கள் மணிகண்டன் மற்றும் ஜெயச்சந்திரன் உத்திரவின் பேரில், வால்பாறை பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வால்பாறை பகுதியில் கீழ்புணாச்சி, ஈத்தகுழி, காடம்பாறை, வெள்ளிமுடி, கவர்கல், நெடுங்குன்று, பாலகிணார், சங்கரன்குடி, பரமன்கடவு, உடுமன்பாறை, கல்லார்குடி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு பழங்குடிகள் குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து வதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு வனத்துறையினர் நேற்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவர்களின் உணவு, கலாச்சாரம் பழக்கவழக்கங்களை இளைய தலைமுறைக்கு முறையாக கற்றுதரவேண்டும் என்றும், குறிப்பாக வனத்தில் கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்துவதின் முறைகளை கற்றுகொடுக்கவேண்டும் என வலியுறுத்தி புலிக்க காப்ப துணை கள இயக்குநர் சேவியர் உத்திரவின்பேரில் பழங்குடி மூப்பன்களுக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தினர்.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் சேவியர் கூறுகையில், நடப்பு ஆண்டு பழங்குடியின மொழிக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருவாரி யாக அழியும் நிலையிலுள்ள மொழிகளைப் பேசுவது பழங்குடியினர். ஆனால் அவர்களின் மொழிகள் அழிவதாகவும், அதனால் அவர்களது கலாச்சாரமும், பாரம்பரியமும் அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே இவைகளை காப்பாற்றவும், ஒரு மொழி பேசும் மனிதர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு காரணங்களால் பழங்குடியின மக்களின் மொழிகளே வேகமாக அழிவதாக கூறப்படுகிறது. எனவே கலாச்சாரத்தை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்காக ஆவன படுத்தவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.