உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரிஷிகேஷ்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 58-ல் ஏற்பட்ட நிலச்சரிவு காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கி நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், மேற்கு வங்க, மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அவ்வப்போது மேக வெடிப்பும் ஏற்பட்டு பருவமழை கொட்டி வருவதால் ஆறுகளில் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
வழக்கத்தை விட அதிக அளவில் பெய்த மழையால் பல இடங்களில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்தது. பல கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. இந்தநிலையில், டோட்டி காட்டி என்ற இடத்தில் அகலம் குறைவான மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவின் போது சாலையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து பாறையும் மண்ணும் சாலையில் செங்குத்தாக விழுந்தன. அந்த காட்சியை அங்கு நின்றவர்கள் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். நிலச்சரிவை அடுத்து அந்த தேசிய டுஞ்சாலை 58-ல் வாகன போக்குவரத்து பல மணி நேரமாக நிறுத்தப்பட்டு, பாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.