×

குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து பப்ஜி மதன் ஆட்கொணர்வு மனு: சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும்  பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதன் மற்றும்  டாக்சிக் மதன்  18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட  ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட  புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார்,  பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல்  உள்ளிட்ட பிரிவுகளில் பப்ஜி மதன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில்  ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட  குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க   சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எந்த  பாதிப்பும் ஏற்படவில்லை. பப்ஜி விளையாடுவது ஒருபோதும் பொது அமைதிக்கு  பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. அதிகாரிகள், மனதை  செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு  பிறப்பித்துள்ளனர். தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய  பப்ஜி விளையாட்டுதான். எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவை  ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு,  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் நேற்று விசாரணைக்கு  வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு  மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டனர்.

Tags : Babji Madan ,Chennai Police Commissioner , Prevention of Thugs Act, Babji Madan, Petition
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்