திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையேயான பரம்பிக்குளம்- ஆளியாறு நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார். கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று சட்டசபையில் கூறியது: கேரள நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 20 முக்கிய அணைகளில் 15 அணைகளில் உலக வங்கியின் உதவியுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் கபினி, பவானி மற்றும் பாம்பார் நதிகளுக்கு குறுக்கே புதிய அணைகள் கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கேரளாவுக்கு நதிநீர் தீர்ப்பாயம் அனுமதித்த தண்ணீரை பயன்படுத்துவதற்காக காவிரி நதியில் புதிய நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்படும். தமிழகம், கேரளா இடையேயான பரம்பிக்குளம்- ஆளியாறு நதிநீர் ஒப்பந்தம் நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.