சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் முத்திரையை பயன்படுத்தி போலியாக முகக்கவசங்களை தயாரித்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாப்பு முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இவை சட்டப்படி காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அங்கீகாரம் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் லோகோவை சட்டவிரோதமாக பயன்படுத்தி போலியாக, பாதுகாப்பற்ற தரம் குறைந்த முகக்கவசங்களை தயார் செய்து அதை கதிர்வேலன் பேப்பர் ஸ்டோர்ஸ் என்ற வாட்ஸ்அப் முகவரியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்திருந்தனர்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரியா டிஸைன்ஸ் மற்றும் ஆர் கிளாத்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களுமான கருணாநிதி என்பவரும், அவரது மனைவி அன்பரசியும் இணைந்து ராம்ராஜ் காட்டன் முத்திரையை பயன்படுத்தி போலி முகக்கவசங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார், நிறுவன உரிமையாளர் கருணாநிதியை கைது செய்தனர்.