திருவள்ளூர்: நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சி மாநில வழக்கறிஞர் அணி பொது செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் தலைமையில் புகார் மனு கொடுத்துள்ளனர். மனு விவரம்: நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் பற்றி அவதூறாக பேசி களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் அமைதியான சூழலை சாதிய வன்மம் உணர்வோடு பேசி சீர்குலைத்த தால் கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மத விரோத உணர்வைத் தூண்டும் விதமாக பொது அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, மாவட்ட தலைவர் பிரின்ஸ் ஜி.பன்னீர், மாவட்ட பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன், மாநில செயலாளர் டி.கே.சீனிவாசன், மாநில நிர்வாகிகள் சி.பி.குமார், பொன்னுதுரை, நகர செயலாளர் எம்.எழில்வண்ணன், நகர தலைவர் டி.தேவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.