அவனியாபுரம்: சிறிய தவறால் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க முடியவில்லை என மதுரை திரும்பிய வீராங்கனை ரேவதி தெரிவித்தார்.மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் இந்திய அணிக்காக ஜப்பான் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். இதன் பின் ரேவதி டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற போது ஏற்பட்ட சிறிய தவறால் பதக்கங்கள் வாங்க முடியவில்லை அடுத்த முறை கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம்.
மதுரையில் உள்ள தடகள பயிற்சி மைதானத்தை சீர்படுத்தினால் இனிவரும் காலங்களில் வெற்றி அடைவதற்கும், அடுத்து வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்கு சிறப்பாக அமையும். மதுரையில் உள்ள தடகள பயிற்சி மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியாமல் வெளியே சென்று பயிற்சி எடுத்து வருகிறோம். அதை சீரமைத்து கொடுத்தால் அனைவரும் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க 4 ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். என்னுடைய விடாமுயற்சி மூலம் போட்டியில் பங்கேற்றேன். சிறிய தவறால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தேன். அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நிச்சயம் பதக்கம் வெல்வேன்’ என்றார்.