சென்னை: சென்னையில் சிதலம் அடைந்த ஆயிரக்கணக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அதே இடத்திலேயே கட்டி தர முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும் என்று குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம், சுதந்திர நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் தியாகராய நகரில் உள்ள காமராஜர் நகர், லலிதாபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன் மற்றும் தியாகராய தொகுதி எம்.எல்.ஏ. ஜே.கருணாநிதி ஆகியோருடன் அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1970ம் ஆண்டு கட்டப்பட்டு சிதலம் அடைந்த ஆயிரக்கணக்காக அடுக்குமாடி வீடுகள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்தார். சிதிலமடைந்த வீடுகளை இடித்து அதே இடத்தில் கட்டித்தர முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். சென்னையில் வசித்து பூர்வகுடி மக்களை வெளியேற்றாமல் 5 முதல் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளேயே அரசு மறுகுடி அமர்ந்தும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
சென்னையில் இதுவரை 22 ஆயிரம் வீடுகள் சிதலம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், 5 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கான வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதியளித்தார். மாற்றுவீடுகள் கட்டித்தரும் வரை மக்களுக்கு கொடுக்கப்படும் 8 ஆயிரம் ரூபாய் உதவி தொகையானது உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.