டெல்லி: நீதிபதி வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணை செய்யும் என்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை வாரந்தோறும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நீதிபதி உத்தம் ஆனந்த், சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். சாலையில் அவருக்குப் பின்னால் சென்ற வாகனம் ஒன்று வேகமாக அவா் மீது மோதும் சிசிடிவி காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக புகார் அளித்தால் போலீசார் பெரிதாக கண்டுகொள்வதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவின் கருத்தால் சர்ச்சை எழுந்தது. மேலும் காவல்துறையினர் வரம்பு மீறி செயல்படுவதை கட்டுப்படுத்த அடிப்படை உரிமைகள் குறித்தும் இலவச சட்ட உதவிகள் குறித்த செய்திகளை அதிகளவில் பகிர வேண்டும் எனவும் ரமணா குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் இது தொடர்பான ஆவணங்களை வாரந்தோறும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.