கடையம் : ஆடி அமாவாசைக்கு ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆம்பூர் கடனாநதி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஆடி அமாவாசையன்று நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு இந்துக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொராேனா பரவலை தடுக்க தாமிரபரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்த தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆடி அமாவாசையான நேற்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மக்கள் நீராடவும், முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்ைல. போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதையடுத்து ஆம்பூர் கடனாநதி, கடையம் வடபத்துக் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர், வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆனால் ஆடி அமாவாசைக்கு வழிபட பக்தர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டு சிவசைலம் கோயில் அடைக்கப்பட்டது.
தென்காசி: இதே போல் ஆடி அமாவாசை தினத்தன்று குற்றாலம் மெயின் அருவி பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும்பொருட்டு அருவிகள் உள்ள நீர்நிலைகளில் குளிக்கவும், திதி உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது.
இதன்காரணமாக இந்துக்களில் பெரும்பாலோனார் தங்கள் வீடுகளிலேயே திதி கொடுத்து முன்னோரை வழிபட்டனர். இருப்பினும் ஒரு சிலர் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதே போல் குற்றாலத்தில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலஞ்சி குமாரர் கோயில் பின்புறம் உள்ள ஆற்றில் பலர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.