ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த 7வது தேசிய கைத்தறி தினவிழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.
கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்த, கைத்தறி நெசவாளர்களை பெருமைப்படுத்த தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆக.7ல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 7வது தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பரமக்குடி சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.
பரமக்குடி சரக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உன்னத தயாரிப்பில் உருவான கைத்தறி ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் பம்பர் காட்டன் சேலைகள், காட்டன் சேலைகள், 1000 புட்டா சேலைகள், காதா டிசைன் சேலைகள், லட்ச தீபம் சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், ஒடிசா காட்டன் சேலைகள், சில்க் காட்டன் சேலைகள், அருப்புக்கோட்டை லுங்கிகள், வேட்டிகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் கைக்குட்டைகள் மேற்கொள்ளப்பட்டது.
காட்சிப்படுத்தப்பட்ட விற்பனை கண்காட்சியை கலெக்டர் சந்திரகலா துவக்கி வைத்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உடனிருந்தார். விழா ஏற்பாடுகளை உதவி இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில் கைத்தறி, துணி நூல் துறை அலுவலர்கள் செய்தனர்.